புரட்டாசி சனிக்கிழமை- திருப்பதியில் 30 மணிநேரமாக காத்திருக்கும் பக்தர்கள்
புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு 30 மணிநேரமாக பக்தர்கள் காத்திருக்கின்றனர்.
புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை என்பதாலும் ஞாயிறு , காந்தி ஜெயந்தி விடுமுறை நாட்கள் என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது. ஏற்கனவே ஆன்லைனில் டிசம்பர் மாதம் வரை ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இதே போல் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளுக்கும் டிக்கெட் வெளியிடப்பட்டு பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
இது போன்று டிக்கெட் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மூன்று மணி முதல் 4 நேரத்தில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதியில் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள ஸ்ரீனிவாசம் காம்ப்ளக்ஸ், ரயில்வே ஸ்டேஷன் எதிரே உள்ள விஷ்ணு நிவாசம் ஆகிய இடங்களில் சர்வ தரிசன நேர ஒதுக்கீடு இலவச டிக்கெட் வழங்கப்படுகிறது. இந்த டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு ஐந்து முதல் ஆறு மணி நேரம் காத்திருந்தால் சுவாமி தரிசனம் செய்து வைக்கப்படுகிறது. இது தவிர எந்த வித டிக்கெட்டுகளும் இல்லாமல் நேரடியாக திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு வைகுண்டம் காத்திருப்பு அறையில் அமர வைத்து பின்னர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். அவ்வாறு வரக்கூடிய பக்தர்களின் கூட்டம் அதிகரித்தால் வைகுண்டம் காம்ப்ளக்ஸ் வெளியே அமைக்கப்பட்டுள்ள நீண்ட வரிசையில் பாபவிநாசம் சாலை வரை அமைக்கப்பட்டுள்ள வரிசையில் சுமார் 3 கிலோ மீட்டருக்கு மேல் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.
அவ்வாறு எந்தவித டிக்கெட்களும் இல்லாமல் வரக்கூடிய பக்தர்களுக்கு 30 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. நேற்று வெள்ளிக்கிழமை காலை முதல் இரவு வரை 66 ஆயிரத்து 233 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து உண்டியலில் ரூ.4.71 கோடி காணிக்கையாக செலுத்தினர்.