கேரள முன்னாள் முதலமைச்சரான பினராயி விஜயனின் வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிஎம்ஆர்எல் – எக்ஸாலாஜிக் நிதி பரிவர்த்தனை வழக்கை மையமாகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கின் பின்னணி குறித்து விரிவாக பார்க்கலாம்.
திருவனந்தபுரம் மற்றும் கண்ணூரில் உள்ள பினராயி விஜயன் தொடர்புடைய வீடுகள், சிஎம்ஆர்எல் நிறுவன அலுவலகம் உள்ளிட்ட 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த நடவடிக்கை, அவரது மகள் வீனா விஜயன் நடத்தும் எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய நிதி பரிவர்த்தனைகளை மையமாகக் கொண்டு நடைபெறுகிறது. வழக்கின் மைய குற்றச்சாட்டு என்னவென்றால், சிஎம்ஆர்எல் நிறுவனம் வழங்கப்படாத சேவைகளுக்காக எக்ஸாலாஜிக் நிறுவனத்திற்கு பெரிய தொகையை மாதாந்திர கட்டணமாக வழங்கியதாகும். வருமான வரித்துறை மேற்கொண்ட ஆய்வில், சுமார் ரூ.1.72 கோடி தொகை வீனா விஜயன் மற்றும் அவரது நிறுவனத்தின் கணக்குகளுக்கு செலுத்தப்பட்டதாக கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.


2019 ஆம் ஆண்டு சிஎம்ஆர்எல் நிறுவனத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனையின் போது, ரூ.132.82 கோடி மதிப்பிலான முறைகேடுகள் கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. கரிமணல் அகழ்வு மற்றும் சுற்றுச்சூழல் விதிமுறை மீறல்கள் தொடர்பாக அரசியல் ஆதரவு பெற பண பரிவர்த்தனைகள் நடைபெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில், சசிதரன் கர்த்தா உள்ளிட்ட நிர்வாகிகள், “பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறைக்கு விசாரணை நடத்த அதிகாரமில்லை” என்று கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மேலும், தீவிர மோசடி விசாரணை அலுவலகமான SFIO ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்து வருவதால், மற்ற அமைப்புகள் தலையிட முடியாது என்றும் வாதிட்டனர்.
ஆனால், இருதரப்பு வாதங்களையும் கேட்ட கேரள உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறை விசாரணையைத் தொடரலாம் என்று அனுமதி வழங்கியது. இதையடுத்து ED தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, முன்னாள் அமைச்சரும் முகமது ரியாஸின் வீட்டிலும் சோதனை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், வீணா விஜயனின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், அடுத்த கட்டமாக பினராயி விஜயனின் வாக்குமூலமும் பதிவு செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாலை அமைக்க முடியாவிட்டால் ஹெலிகாப்டர் கொடுங்கள் – அமித்ஷாவிடம் சத்தீஸ்கர் கிராம மக்கள் மனு
