கர்நாடக தேர்தல்- ரூ.375 கோடி மதிப்பிலான இலவச பொருட்கள் பறிமுதல்
2018 சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிடும்போது 2023 சட்டமன்ற தேர்தலில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு 4.5% அதிகரித்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் இந்திய தேர்தல் ஆணையத்தால் மே 29ம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்த நிலையில் மாநிலம் முழுவதும் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் தீவிர தணிக்கையில் ஈடுபட்டனர். நேற்ற தினம் தேர்தலுக்கான பரப்புரை ஓய்வடைந்துள்ள நிலையில், நேற்று வரை மாநிலம் முழுவதும் தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பாக கொண்டு செல்லப்பட்ட மதுபானம், போதைப் பொருள்கள், தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த இலவச பொருள்கள் என 375.61 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதில் நடப்பு தேர்தலில், 147.46 கோடி ரொக்க பணம், 83.66 கோடி ரூபாய் மதிப்புள்ள 22,27,045 லிட்டர் மதுபானம், 23.67 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள்கள்,96.60 கோடி ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த பொருள்கள் மற்றும் 24.21 கோடி ரூபாய் மதிப்புள்ள இலவசங்கள் உள்ளிட்டவை அடங்கும் என்றும் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலுடன் ஒப்பிடும்போது 2023ம் ஆண்டு (நடப்பு) தேர்தலில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் அளவு 4.5% அதிகரித்து இருப்பதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் தேர்தலை நேர்மையாக நடத்துவதற்கு கர்நாடக எல்லையோர மாநிலங்கள் மற்றும் அதிகாரிகள் உரிய ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.