கர்நாடகாவில் கொட்டும் மழை- பள்ளிகளுக்கு விடுமுறை
கர்நாடகாவில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழை காரணமாக, 10 மாவட்டத்தில் உள்ள பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் கடலோரப் பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என எச்சரித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், மாநிலத்தின் கடலோரப் பகுதியில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் எதிரொலியால் தொடர் மழை காரணமாக உடுப்பி, குடகு மற்றும் தார்வாட் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு கர்நாடக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும், மழை பெய்யும் போது, அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு, வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது. பெலகாவி, யாத்கிர், தார்வாட் மற்றும் பிதார் மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும். வட கர்நாடகாவிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பல பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.