
அசாதாரணமான சூழல்களிலும், அமைச்சர் (அல்லது) முதலமைச்சர் பொறுப்பு வகிப்பவர்களும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சமயங்களிலும் இலாகாக்கள் மாற்றிக் கொடுக்கப்பட்ட நிகழ்வுகள் நடந்துள்ளன. அது குறித்து விரிவாகப் பார்ப்போம்!

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுப்பு- அமலாக்கத்துறைக்கு அனுமதி!
கடந்த 1984- 1985 ஆம் ஆண்டில் தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். உடல்நலக்குறைவால் அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவர் நிர்வகித்தத் துறைகளை அப்போதைய நிதியமைச்சர் நெடுஞ்செழியன் கவனிப்பார் என்று அப்போதைய ஆளுநர் குரானா அறிவித்திருந்தார்.
அதேபோல், கடந்த 2011- ஆம் ஆண்டு தமிழக கால்நடைத்துறை அமைச்சராக இருந்த கருப்பசாமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட போது, அவரது இலாகா மற்றொரு அமைச்சருக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் இலாகா இல்லாத அமைச்சராக கருப்பசாமி நீடித்தார்.
2011- ஆம் ஆண்டு முதல் 2016- ஆம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த செந்தூர் பாண்டியன், கடந்த 2015- ஆம் ஆண்டு திடீர் உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டார். அவரது வசம் இருந்த இந்து சமய அறநிலையத்துறை அப்போதைய உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வசம் ஒப்படைக்கப்பட்டது.
2016- ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவரது துறைகளை ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்து ஆளுநர் உத்தரவிட்டார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 166 (3)- ன் படி இந்த அறிவிப்பை ஆளுநர் வெளியிட்டார்.
தமிழகத்தில் மட்டுமல்ல, மத்தியிலும் இலாகா இல்லாத அமைச்சர்களாக சிலர் பொறுப்பு வகித்த வரலாறும் உள்ளது. அதன்படி, கடந்த 1962- ஆம் ஆண்டு பதவியேற்றுக் கொண்ட பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக டி.டி.கிருஷ்ணமாச்சாரி பொறுப்பேற்றார்.
இதேபோல் நேரு அமைச்சரவையில் 1964- ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை லால் பகதூர் சாஸ்திரி இலாகா இல்லாத அமைச்சராக இருந்தார். நேரு மறைவுக்கு பிறகு அவர் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். 2003- ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் மம்தா பானர்ஜிக்கு நிலக்கரித்துறை ஒதுக்கப்பட்ட போது, அதை அவர் ஏற்காத நிலையில், இலாகா இல்லாத அமைச்சராகப் பதவி வகித்தார்.
வாஜ்பாய் அமைச்சரவையில் இருந்த முரசொலி மாறன், 2003- ஆம் ஆண்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பல மாதங்கள் சிகிச்சைப் பெற்று வந்தார். அவர் வகித்து வந்த தொழில் மற்றும் வர்த்தகத்துறைகள் அருண்ஜெட்லியிடம் கொடுக்கப்பட்டன.
தண்ணீர் என நினைத்து ஸ்பிரிட் குடித்த சிறுமி பலி
தற்போதைய தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ், கடந்த 2004- ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் முதலில் இலாகா இல்லாத அமைச்சராகப் பதவி வகித்தார். பின்னர், அவருக்கு தொழிலாளர் நலத்துறை ஒதுக்கப்பட்டது.
2005- ஆம் ஆண்டு இந்தியா-ஈராக் இடையே உணவுக்கு எண்ணெய் திட்டத்தால் அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர்சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அவர் வசம் இருந்த வெளியுறவுத்துறைப் பறிக்கப்பட்டு, இலாகா இல்லாத அமைச்சராக இருந்தார்.
டெல்லியில் இரண்டாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், தன் வசம் எந்த துறையையும் வைத்துக் கொள்ளவில்லை.