
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு மார்ச் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து நாடாளுமன்ற மக்களவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. இது தொடர்பாக அனைத்து மாநில தேர்தல் ஆணையர்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. இதேபோல் அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர். தொடர்ந்து பத்தாண்டு காலமாக ஆட்சியில் உள்ள பாஜக மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. இதேபோல் பாஜகவை ஆட்சி கட்டிலில் இருந்து இறக்க எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற கூட்டணியை அமைத்து தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் வருகின்றன.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் மார்ச் முதல் அல்லது 2ஆவது வாரத்தில் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக தேர்தல் ஆணையர்கள் மாநில வாரியாக சென்று இறுதி கட்டப் பணிகளை ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ளனர். மாநிலம் வாரியாக ஆய்வுகள் முடிவதற்கு மார்ச் முதல் வாரம் ஆகும் என்பதால் அதன் பிறகே தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.