
சபரிமலை ஐயப்பன் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 4 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை கேரள மாநிலம் வந்தடைந்தார். முதலாக திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு, அம்மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் , முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் சிறப்பு வரவேற்பு அளித்தனர். பின்னர் சாலை மார்க்கமாக ஆளுநர் மாளிகைக்கு சென்ற முர்மு, நேற்று இரவு அங்கேயே தங்கி ஓய்வெடுத்தார்.

தொடர்ந்து இன்று காலை சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் ஹெலிகாப்டர் மூலம் அவர் புறப்பட்டார். ஆனால் மோசமான வானிலை காரணமாக நிலக்கல் பகுதியில் தரையிறங்க வேண்டிய ஹெலிகாப்டர் , பிரமாடம் என்னுமிடத்தில் தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஹெலிகாப்டர் தளத்தில் அவரசமாக தரையிறக்கப்பட்டது.
அதன்பின்னர் அங்கிருந்து கார் மூலம் பம்பை கணபதி கோயிலுக்கு சென்ற குடியரசுத் தலைவர் முர்மு, பம்பையில் இருந்து இருமுடி கட்டி சிறப்பு வாகனத்தில் சன்னிதானத்திற்கு சென்றார். பின்னர் 18ம் படி ஏறி சபரிமலை ஐயப்பன் சுவாமியை தரிசனம் செய்தார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் அவரது உதவியாளர்கள் மற்றும் பாதுகாவலர்களும் இருமுடி அணிந்து 18ம் படி ஏறி சுவாமி தரிசனம் செய்தனர். குடியரசுத் தலைவர் வருகையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



