நாட்டின் தலைநகரான டெல்லி மற்றும் ராஜஸ்தானின் சுரு (Churu) பகுதிகளில் திடீரென ஏற்பட்ட பிரமாண்ட புழுதிப் புயல் பொதுமக்களை பெரிதும் பாதித்துள்ளது.
டெல்லி துவாரகா பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் அருகே பலத்த காற்றுடன் புழுதிப் புயல் வீசியதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். அதேபோல், ராஜஸ்தானின் பாலைவன நகரமான சுருவிலும் திடீரென கடும் புழுதிப் புயல் உருவானது. பலத்த காற்றின் காரணமாக மணலுடன் குப்பைகள் மற்றும் பிற பொருட்களும் காற்றில் தாறுமாறாக பறந்ததால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதியடைந்தனர். சில இடங்களில் பார்வைத்திறன் குறைந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, டெல்லி மற்றும் சுரு பகுதிகளில் ஏற்பட்ட புழுதிப் புயலின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. சுட்டெரிக்கும் வெயிலும் வறண்ட வானிலையும் நிலவி வந்த நிலையில் திடீரென ஏற்பட்ட மணல் புயல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல பகுதிகளில் சாலைகள் மற்றும் கட்டிடங்கள் மணலால் மூடப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். தொடர்ந்து வானிலை மாற்றங்களை கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
