பாஜகவினர் ஊடகத்தை வைத்து அரசியல் செய்கின்றனர்- அன்வர் ராஜா
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் மீண்டும் இணைந்தார் முன்னாள் எம்பி அன்வர் ராஜா.
அதிமுகவில் மீண்டும் இணைந்த முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா சென்னையில் பேட்டியளித்தார். அப்போது, “பாஜக மீதான விமர்சனம் என்பது வேறு, கூட்டணி என்பது வேறு. கொள்கைக்கு இடர்பாடுகள் வந்தால் எந்த கூட்டணியாக இருந்தாலும் வெளியேற அதிமுக தயங்கியது இல்லை. எனக்கு கட்சியில் எந்த முக்கியத்துவமும் தேவையில்லை. மக்களவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி முடிவு செய்யும்
சிறிய சறுக்கலில் இருந்து மீண்டு, அதிமுகவில் இணைந்துள்ளேன். கட்சியின் கொள்கைகளுக்கு உடன்பட்டு தொடர்ந்து பணியாற்றுவேன். இந்தியாவில் காங்கிரசை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளன. விலகி இருந்தாலும் கட்சியினரின் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தேன். என்னை யாரும் தடுக்கவில்லை. அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரனை சேர்ப்பது குறித்து கட்சி தலைமை தான் முடிவு செய்யும். விளம்பரம் ஊடகத்தை வைத்து பாஜகவினர் அரசியல் செய்கிறார்கள். அது நிலைக்காது. இன்றைக்கும் கூட பாஜகவினர் அதிமுகவை விமர்சிக்கிறார்கள். கூட்டணி குறித்து முடிவெடுக்க வேண்டியது 2 கட்சி தலைவர்கள்தான்.” என்றார்.