தமிழ்நாட்டில் மத வன்முறையை தூண்டுவதே என்பதே பாஜகவின் நோக்கமாக உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து வஞ்சகம் செய்து வரும் பாஜக, தமிழ்நாட்டின் எதிரியாகவே செயல்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

மத வன்முறையை தூண்டும் பாஜகவுக்கு எதிராக குரல் கொடுக்காமல், அதிமுக மௌன சாட்சியாக அமைதி காக்கிறது என்றும் முதலமைச்சர் விமர்சித்தார். மாநில சுயாட்சி என்றாலே பயந்து ஒளிந்து கொள்வதே அதிமுகவின் நிலைப்பாடு என்றும், அவர்களுக்கு சுயாட்சி எண்ணமோ சுயமரியாதை உணர்வோ இல்லை என்றும் அவர் கூறினார்.
வன்முறையைத் தவிர்த்து வறுமையை வெல்ல வேண்டிய இந்த மண்ணில், எந்த வகையில் மத வன்முறையை தூண்டலாம் என்பதே பாஜகவின் ஒரே நோக்கமாக உள்ளது என மு.க.ஸ்டாலின் சாடினார். திராவிட மாடலின் குரல், பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும் இன்று ஒலித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் செய்யும் பாஜகவுடன் அதிமுக கை கோர்த்து செயல்படுகிறது என்றும், திமுகவுக்கு எதிராக செயல்படுவதாக நினைத்து தமிழ்நாட்டின் வளர்ச்சியை படுகுழியில் தள்ளும் சதியை திமுகவினரால் மட்டுமே முறியடிக்க முடியும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தினார்.
அண்ணா வழியில் அயராது உழைத்து, மக்களின் ஆதரவுடன் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக உறுதியாக வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற கொள்கையை திராவிட மாடல் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்றும் அவர் கூறினார்.
மேலும், பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாளையொட்டி, நாளை அண்ணா சதுக்கம் நோக்கி அமைதி பேரணி நடத்தப்பட உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.


