அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகாரம் செய்ததை தேர்தல் ஆணையம் மறுபரீசிலனை செய்ய உத்தரவிட வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுகவைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் மற்றும் கே. சி. சுரேன் பழனிச்சாமி ஆகியோர் தொடர்ந்துள்ள வழக்கில்,
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக கட்சியில் தொண்டர்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதை தடுக்கும் வண்ணம் கட்சியின் சட்ட விதிகளுக்கு முரணாக கடந்த 2022 ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த பொதுக்குழுவில் திருத்தப்பட்டதை எதிர்த்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர்.
வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் தேர்தல் ஆணையம் கடந்த 2023 ஆண்டு ஏப்ரல் மாதம் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு கட்டுப்பட்டது என்ற நிபந்தனையுடன் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகாரம் செய்தது மட்டுமின்றி கட்சி விதிகளில் திருத்தங்களையும் அங்கீகாரம் அளித்ததாக தெரிவித்துள்ளனர்.
இதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும்,
இந்த சூழ்நிலையில் கட்சியின் எதிர்காலம் மற்றும் தொண்டர்களின் உரிமையை பாதுகாக்கும் வண்ணம் தேர்தல் ஆணையம் தனது திருத்தப்பட்ட கட்சி விதிகளில் பொதுக்குழு மாற்றங்கள் செய்ததையும் எடப்பாடி கே. பழனிச்சாமியை பொதுச் செயலாளராக அங்கீகரித்தை மறு பரிசீலனை செய்ய தேர்தல் ஆணையத்திடம் மனுக்கள் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அந்த மனுக்களின் அடிப்படையில் மனுக்கள் குறித்து நேரில் விளக்கம் அளிக்கவும் வழக்கு ஆவணங்களை அளிக்கவும் அதனடிப்படையில் உரிய முடிவு எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் R. சுப்பிரமணியன் மற்றும் குமரப்பன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
ஏற்கனவே இதே போல் வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் இது விளம்பரத்துக்காக தொடரப்பட்ட வழக்கு என்று கூறி வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாத என தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
எனக்கு அவர்தான் தம் அடிக்க கற்றுக் கொடுத்தார்…. பாலா குறித்து பேசிய சூர்யா!