மக்கள் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம். ஆனால் ஒரு அரசு எந்த ஒரு மதத்தையும் பாதுகாக்க கூடிய அதனை பின்பற்றுகிற அரசாக இருக்ககூடாது என்பதுதான் மதச்சார்பின்மை என்றார் சுப.வீரபாண்டியன்.

சென்னை அம்பத்தூரில் திமுக சார்பில் “சுயமரியாதையின் கிழக்கு” என்கிற தலைப்பில், இனமான பேராசிரியரின் நூற்றாண்டு பொதுக்கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய சுப.வீரபாண்டியன், நான் இன்றைக்கும் மிலாது நபி, கிறிஸ்துமஸ் போன்ற கூட்டத்தில் கலந்துகொள்வதில்லை. ஆனால் சிறுபான்மையினருக்கு ஒரு ஜனநாயக பிரச்சனை வந்தால் அவர்களோடு தோளோடு தோழனாக நிற்பேன் என்றார்.
1994 ஆம்ஆண்டில் ஒன்பது நீதிபதிகள் அமர்ந்து ஒரு மதம் சார்ந்த கட்சி இயங்குவதற்கு அனுமதிக்க கூடாது என்று சொன்னார்கள். நீங்கள் மதம் மாற்றம் உடையவர்களாகவும் மதம் சார்ந்த மக்களாகவும் இருக்கலாம். ஆனால் ஒரு மதத்திற்காக ஒரு கட்சி இருக்ககூடாது. அந்தக் கட்சி ஆட்சிக்கு வருமானால் மற்ற மதம் சார்ந்தவர்கள் நிலைமை என்ன ஆகும் என்று கேள்வி எழுப்பினார்.
அதே கூட்டத்தில் பேசிய அமைச்சர் தா.மோ அன்பரசன், கடந்த 10 வருடமாக ஆட்சியில் இருந்த அதிமுக வின் அமைச்சர் தங்கமணி என்பவர் உதய் திட்டத்தில் கையெழுத்து போட்டதால் கரண்ட் பில் இன்று இவ்வளவு வருவதற்கு காரணம் என்றார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு குறுகிய காலகட்டத்தில் 2,22,420 கோடி முதலீட்டில் 197 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு இதுவரை 3 லட்சத்து 39 ஆயிரத்து 650 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க கூடிய அளவுக்கு இன்று தொழிற்சாலைகள் எல்லாம் தமிழகம் முழுவதும் அமைந்து கொண்டிருக்கிறது என்றார்.