திரௌபதி அம்மன் கோயிலை வைத்து சீமான் அரசியல் நாடகத்தில் ஈடுபடுகிறார். ஒரு வாரத்தில் திரௌபதி அம்மன் கோயில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படுவர் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள விக்டோரியா அரங்கு புனரமைக்கப்பட்டு வருகிறது. புனரமைப்பு பணிகளை அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பார்வையி்ட்டனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, “மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலில் தரிசனம் செய்யவும், வழிபாடு செய்யவும் பொதுமக்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை என்றால் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தப்படும் என சீமான் கூறியுள்ளார்.
திரௌபதி அம்மன் கோயிலை வைத்து சிலர் அரசியல் செய்யலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சீமானின் நாடகம்: திரெளபதி அம்மன் திருக்கோயிலில் தினசரி பூஜைகளும் நடப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அறநிலையத் துறை மேற்கொண்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் திரௌபதி அம்மன் திருக்கோயில் திறக்கப்படவுள்ளது. கனிந்த மரத்திற்கு அடியில் நின்று பழம் விழுந்தால் தன்னால் தான் விழுந்தது என்று சிலர் கூறுவது வழக்கம். அதேபோல இந்த ஆட்சி ஒரு செயலை முன்னெடுத்து செய்து வரும்போது அதற்கான பலன் கிடைக்கும் சூழலில் இப்படி ஒரு போராட்டத்தை சீமான் அறிவித்துள்ளார்.
தாம் போராட்டம் நடத்தியதால்தான் திரெளபதி அம்மன் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதாக சொல்லிக் கொள்வதற்காகவே அவர் இதில் நாடகம் நடத்துகிறார். அவரின் நாடகத்தை கண்டு மக்கள் மயங்கமாட்டார்கள். வெகுவிரைவில் திரௌபதி அம்மன் திருக்கோயில் மக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்” என்று சேகர் பாபு கூறினார்.