தமிழ்நாடு என்பதை ஏற்க மறுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவொற்றியூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசின் 20க்கும் மேற்பட்ட மசோதாக்களை நிறைவேற்றாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கும் ஆளுநர் ரவியை கண்டித்தும் ஒன்றிய அரசு உடனடியாக ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவொற்றியூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆளுநருக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு பாதகமில்லாமல் அதன் செயல்பாட்டை வலுப்படுத்துவதைத் தான் ஆளுநர் செய்ய வேண்டும்.
ஆனால் அந்த வேலையைக் கூட தாமதப்படுத்தி 20-க்கும் மேற்பட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார் ஆளுநர் ரவி.
புதிய கல்விக் கொள்கையை திணிக்க முயல்கிறார். பல்கலைக்கழகங்களில் மூக்கை நுழைக்கிறார்.
ஆன்லைன் ரம்மி நிறுவனங்களுக்கு எதிரான அவசர சட்டத்தை காலாவதி ஆக்கச் செய்து ‘ரம்மி ரவி’ என்ற இழிபுகழை சம்பாதித்துள்ளார்.
இந்த ஆளுநரை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.