ராமேஸ்வரத்தில் திடீரென 100 மீட்டர் உள்வாங்கிய கடல்
ராமேஸ்வரத்தில் திடீரென 100 மீட்டருக்கு கடல் உள்வாங்கியதால், நாட்டு படகுகள் தரைதட்டி நிற்கின்றன.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளிலும், 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் திடீரென 100 மீட்டர் கடல் உள்வாங்கியதால் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப்படகுகள் தரை தட்டி நிற்பதோடு அதனை மீட்கும் முயற்சியில் மீனவர்கள் ஈடுபட உள்ளனர். மேலும் திடீரென 100 மீட்டர் கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டு வருகின்றது.
இது குறித்து மத்திய கடல் ஆராய்ச்சியாளர்களிடம் கேட்டபோது காலநிலை மாற்றம் காரணமாக கடல் உள்வாங்குவதாகவும் சிறிது நேரம் கழித்து இயல்பு நிலைக்கு வந்துவிடும் என தெரிவித்துள்ளனர். மேலும் அக்னி தீர்த்தக் கடலும் 100 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கி இருந்ததால் பக்தர்கள் குளிப்பதில் சிரமம் ஏற்பட்டது.