குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று நள்ளிரவு சூரசம்காரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனையொட்டி குலசையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தில் உள்ள அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவிற்கு மிகவும் புகழ் பெற்றதாகும். இக்கோவிலில் தசரா விழா கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. பக்தர்கள் காப்பு கட்டி காளி, முருகன், கிருஷ்ணன், ராமர் வள்ளி உள்ளிட்ட கடவுளர் உருவங்களும், ராஜா ராணி குறத்தி, கோமாளி பூதம் போன்ற பல்வேறு வேடங்களை அணிந்து, குலசேகரப்பட்டினம் சுற்றியுள்ள ஊர்களில் முகாமிட்டுள்ளனர். இந்த நிலையில் திருவிழாவின் 10ஆம் நாளான இன்று நள்ளிரவு தசரா திருவிழாவில் உச்சகட்ட நிகழ்ச்சியான சூரசம்காரம் நடைபெற உள்ளது.
இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனையொட்டி , காவல்துறையினர் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 4000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீயணைப்புணர் துறையினர் சார்பில் கடற்கரைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் சிறப்பு 3 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. 300-க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் களப்பணி ஆற்றி வருகிறார்கள். மேலும் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களின் வசதிக்காக குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.