திருப்பதி சென்றுவிட்டு திரும்பிய வாகனம் மீது லாரி மோதி விபத்து- 5 பேர் பலி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு கர்நாடக மாநிலம் பெல்காம் சென்று கொண்டிருந்த பக்தர்களின் வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் பண்டிசேரி கிராமத்தை பக்தர்கள் 14 பேர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு வந்தனர். கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு பிறகு நேற்று இரவு ஊருக்கு புறப்பட்டனர். இவர்கள் வாகனம் சித்தூர் – ஐதராபாத் சாலையில் அன்னமய்யா மாவட்டம் கே.வி.பள்ளி மண்டலம் மடம்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது கடப்பாவில் இருந்து சித்தூர் நோக்கி சென்ற லாரி பக்தர்கள் வாகனத்தின் மீது மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே டிரைவர் அனுமந்த் (30), அனுமந்த்(40), அம்பிகா(14), ஷோபா (34) மானந்தா (32) ஆகிய 5 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்கள் சடலம் பீலேரு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் 7 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை திருப்பதி ரூயா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிகாலை 2.30 மணிக்கு நடந்த விபத்தால் தூக்கத்திலேயே பலர் உயிர் காற்றில் கலந்தது. இந்த விபத்து குறித்து கே.வி.பள்ளி காவல் நிலைய எஸ்.ஐ. லோகேஷ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

![]()
காயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.


