அதிமுகவிலிருந்து விலகித் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்யக்கோரி சட்டப்பேரவைச் சபாநாயகரிடம் அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம் இது குறித்துத் தெரிவித்த முக்கியத் தகவல்கள்.

சபாநாயகரிடம் பதில் கடிதம் சமர்ப்பிப்பு
தொகுதி மக்களுக்குத் துரோகம் செய்துவிட்டு, குதிரை பேரத்தின் மூலமாக தவெகவில் இணைந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கனவே வலியுறுத்தப்பட்டிருந்தது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குச் சபாநாயகர் கடிதம் மூலம் விளக்கம் அளித்திருந்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பதில் கடிதத்தை இன்று சபாநாயகரிடம் நேரில் வழங்கினோம். இதன் அடிப்படையில், கட்சி மாறிய எம்.எல்.ஏ-க்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சபாநாயகர் உறுதியளித்துள்ளார். சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டு சபாநாயகர் செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
இடைத்தேர்தலில் நிற்க முடியாது
அமைச்சராக வேண்டும் என்ற ஆசையிலேயே சட்டமன்ற உறுப்பினர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டால், ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த இந்த சட்டமன்ற உறுப்பினர்களால் இடைத்தேர்தலில் போட்டியிட முடியாது.
கூட்டணி வதந்திகளுக்குப் பதில்
அதிமுக – திமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததாகத் திருமாவளவன், சண்முகம் ஆகியோர் கூறிவருவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், ”அப்படி ஒரு பேச்சுவார்த்தை நடந்திருந்தால் அதில் இவர்கள் பங்கேற்றார்களா?” எனக் கேள்வி எழுப்பினார். மேலும், திருமாவளவன் ஆளும் கட்சியின் கூட்டணியில் இடம்பெற்று அமைச்சரவையிலும் பங்கு வகிப்பதால், அவர் எதை வேண்டுமானாலும் பேசுவார் என்றும் தளவாய் சுந்தரம் விமர்சித்துள்ளார்.
