மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து, அண்ணா பல்கலைக் கழகத்தில் பெண்கள் நலனை பாதுகாக்க 16 பேராசிரியர்கள் கொண்ட குழு அமைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை அடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிகள் மற்றும் பெண் பேராசிரியர்களின் நலனுக்காக 16 பேர் கொண்ட குழு அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பல்கலைக் கழகத்தில் உடனடியாக 40 புதிய செக்யூரிட்டிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 140 செக்யூரிட்டிகள் இருக்கும் நிலையில் அதனை 180 ஆக உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அண்ணா பல்கலைக் கழகத்தில் 30 புதிய சிசிடிவிகளை பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் பழுதடைந்த சிசிடிவிகளை உடனடியாக சரி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் அசம்பாவிதம் நடைபெற்றுள்ளதால் அதிலிருந்து மீண்டு வர மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விடுதிகளில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த வார்டன்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு பணிகளுக்கு குழுக்கள் அமைத்து தேவையான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.