தமிழகம் முழுவதும் இன்று காலை 6 மாவட்டங்களில் 11 இடங்களிலும்,சிறைச்சாலைகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பகுதியாக கொடுங்கையூரில் சிறைத்துறைக்கு ஒப்பந்த அடிப்படையில் காய்கறிகள் வழங்கும் நிறுவனத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்திவருகின்றனர்.
மூன்று மத்திய சிறைகளில் தயாரிக்கப்பட்ட சரக்கு பொருட்கள் சேர வேண்டிய அரசு துறைகளுக்கு செல்லாமல் அரசுக்கு 5. 91 கோடி இழப்பு ஏற்படுத்தி உள்ளதாகவும், சந்தை மதிப்பில் 14.35 கோடி மோசடி நடந்திருப்பதாக தணிக்கை துறை சமீபத்தில் தெரிவித்து இருந்தது.
சிறைகதிகளுக்கு 60 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும், அதிகபட்சமாக 5400 ரூபாய் சம்பளம் கூட தாண்டவில்லை என தெரியவந்தது. சிறை கைதிகள் சம்பளத்திலும் மோசடி நடந்துள்ளதாக மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் தொடர்ச்சியாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தமிழகம் முழுவதும் இன்று காலை 6 மாவட்டங்களில் 11 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களிலும், சிறைச்சாலைகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கொடுங்கையூர்,சசிரேகாம்மா நகர் பகுதியில் உள்ள எஸ் எஸ் டிரேடர்ஸ் நிறுவனத்தில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் விஷ்வகுமார். தலைமையிலான போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர் இதில் சீனிவாசன் மற்றும் அவரது மனைவி சாந்தி ஆகியோர் இந்த நிறுவனத்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து சிறைத்துறைக்கு ஒப்பந்த அடிப்படையில் காய்கறிகள் கடந்த 15 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருவதாகவும் அதற்கான ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றி சோதனை நடத்தி வருகின்றனர்.