சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் நியமனம்
சென்னை உயர்நீதிமன்றம் பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ். வைத்தியநாதனை நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஸ்வரநாத் பண்டாரி ஓய்வு பெற்றதையடுத்து, மூத்த நீதிபதியாக இருந்த துரைசாமி சில நாட்கள் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்தார் .அவர் ஓய்வு பெற்றதையடுத்து கடந்த செப்டம்பர் முதல் பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள டி.ராஜா இன்று ஓய்வு பெறவுள்ளார். இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் 2வது மூத்த நீதிபதியான எஸ். வைத்தியநாதனை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

மே 25ம் தேதி முதல் நீதிபதி வைத்தியநாதன் தலைமை நீதிபதி பணிகளை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் பிறந்த நீதிபதி வைத்தியநாதன், பள்ளி மற்றும் சட்ட படிப்பை சென்னையில் முடித்தார். 1986ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கறிஞர் தொழிலை தொடங்கிய வைத்தியநாதன், 2013ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள கங்கா பூர்வாலாவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்தது. அந்த பரிந்துரை மீது மத்திய அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


