தமிழகம் முழுவதும் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்சி கொடி மரங்கள் தற்போதைய நிலையை தொடர வேண்டும் (மறு உத்தரவு வரும் வரை கொடி மரங்களை அகற்றக்கூடாது) என மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் நீதிபதி ஜி.கே இளந்திரையன் 2025 ஜனவரி 27 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதி நிஷாபானு தலைமையிலான அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை உறுதிசெய்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் P.சண்முகம் சார்பில் இந்த வழக்கில் தங்களையும் இணைத்து விசாரிக்க வேண்டும் என்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் ‘கருத்து சுதந்திரத்தின்படி அரசியல் கட்சிகள் தங்களின் அடையாளங்களை வெளிப்படுத்த உரிமை உள்ளது. அடையாளங்களை பொதுவெளியில் காட்சிப்படுத்த தடை விதிப்பது, அதன் நோக்கத்தை சீர்குலைத்துவிடும். சொந்த இடங்களில் கட்சி, கொடி கம்பம் வைக்க அதிகாரிகளின் அனுமதி பெற வேண்டும் என்பதை ஏற்க முடியாது. அரசியல் கட்சிகளிடம் விளக்கம் கேட்காமல் கொடியை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும், ஜூலை 18 ஆம் தேதிக்குள் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேல்முறையீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற வேண்டும் என மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு , தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தது.

அதன்படி, கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம், நீதிபதி சௌந்தர், நீதிபதி விஜயகுமார் அடங்கிய முழு அமர்வு, கொடி கம்பம் அகற்றுவது குறித்த வழக்கை விசாரிக்கும் என தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம், நீதிபதி சௌந்தர், நீதிபதி விஜயகுமார் அடங்கிய முழு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது நீதிபதிகள் கொடி கம்பங்கள் அகற்றும் விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன? சாலைகளில் ஊண்டப்பட்டுள்ள கொடி மரங்கள் இடையூறு என்றால் சாலைகளில் நிறுவப்பட்டு உள்ள சிலைகளும் இடையூறு தானே அதை ஏன் அகற்றவில்லை?
எனவே இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு ஆங்கில நாளிதழ் தமிழ் நாளிதழில் முழு விளம்பரம் செய்ய வேண்டும். இந்த வழக்கில் யாரெல்லாம் இருட்டு மனு தாக்கல் செய்ய விருப்பம் உள்ளவர்களோ அவர்கள் அனைவரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். இடியட்டும் மனுக்களை தாக்கல் செய்யலாம் என்பது தொடர்பாக தமிழக அரசு மாநிலம் முழுவதும் வெளிவரக்கூடிய ஆங்கில நாளிதழ் மற்றும் தமிழ் நாளிதழில் விளம்பரம் செய்ய வேண்டும்.
அதற்குப் பின்னதாக வரக்கூடிய எந்த மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என தெரிவித்த நீதிபதிகள் அதுவரை கொடிக்கம்பங்கள் அகற்றும் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஆகஸ்ட் 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.