பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் ஓய்வுபெற்ற ஐ.ஜி., முருகனுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு அதிரடிப்படை ஐ.ஜி. ஆக பணியாற்றியவர் ஐபிஎஸ் அதிகாரி முருகன். இவர் சென்னையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியாக பணியாற்றியபோது பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த 2018ஆம் ஆண்டு புகார் அளித்திருந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை பலமுறை ஐ.ஜி. முருகன் பெண் அதிகாரிக்கு செல்போனில் பாலியல் ரீதியாக ஆபாச தகவல்கள் அனுப்பியதாகவும், தனியாக அறைக்கு அழைத்து அத்துமீறியதாகவும் ஆதாரத்துடன் குற்றச்சாட்டு வைத்தார்.
இந்த புகார் தொடர்பாக விசாக கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதனிடையே, ஐ.ஜி. முருகன் மீதான வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என பெண் ஐபிஎஸ் அதிகாரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு தெலுங்கானா மாநிலத்துக்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. மேலும், சிபிசிஐடி போலீசாரும் முருகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். கடந்த 2021 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி தொடர்ந்த பாலியல் வாழக்கை தமிழகத்தில் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்த நிலையில் ஐபிஎஸ் அதிகாரி என்பதால் அவர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் அனுமதி வழங்க ஆளுநர் மற்றும் தமிழக அரசுக்கு சிபிசிஐடி காவல்துறை அனுமதி கடிதம் எழுதியிருந்தனர். இதனை அடுத்து முருகன் மீது நடவடிக்கை எடுக்க சிபிசிஐடி காவல்துறைக்கு தமிழக அரசும், ஆளுநரும் அனுமதி வழங்கினர். அதன் அடிப்படையில் முன்னாள் ஐ.ஜி. முருகன் மீது எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
குறிப்பாக ஐஜி முருகன் மீது பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் முன்னாள் ஐஜி முருகன் விசாரணைக்கு நேரில் அஜாரகதாதால், அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.