ED உதயநிதி ஸ்டாலினின் வீட்டு கதவைக் கூட தட்ட வாய்ப்புள்ளது- ஹெச்.ராஜா
இன்னும் 24 மணி நேரத்திற்குள் உதயநிதி ஸ்டாலினின் வீட்டு கதவைக் கூட அமலாக்கத்துறை தட்ட வாய்ப்புள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, “பாஜகவினரின் தொடர் கைது கண்டித்தக்கது. தமிநாட்டில் அறிவிக்கப்படாத் எமெர்ஜென்சியாக இது உள்ளது. காவிரி நதி நீர் பங்கீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக துரோகம் செய்பவர்கள் திமுகவினர். அதில் பங்குதாரர்களாக இருப்பவர்கள் காங்கிரசார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபின் மேகதாது அணை கட்ட முயன்று வருகிறது கர்நாடக அரசு. முதலமைச்சர் ஸ்டாலின் இதுகுறித்து வாய் திறக்கவில்லை. தொடர்ந்து காவிரியில் டெல்டா விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அந்த கூட்டத்திலிருந்து ஸ்டாலின் வெளியே வரவேண்டும். இல்லையென்றால் பாஜக போராட்டங்களை கையில் எடுக்கும், இன்னும் 24 மணி நேரத்திற்குள் உதயநிதி ஸ்டாலினின் வீட்டு கதவைக் கூட அமலாக்கத்துறை தட்ட வாய்ப்புள்ளது.

அமைச்சர்கள் கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன் மீது அமலாக்கத்துறையில் வழக்குகள் உள்ளன. அமலாக்கத்துறை விசாரணையில் அடுத்து சிக்குவது யார்? என்பது விரைவில் தெரியும். பொன்முடி மீது ஏற்கனவே இருந்த வழக்கில் தான் சோதனை நடைபெற்றது. இதில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை ஏதுமில்லை. பாஜகவுக்கும் அமலாக்கத்துறை சோதனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றார்.


