எத்தனை கோடி கையெழுத்து வாங்கினாலும் ஆளுநரை மாற்ற முடியாது- வானதி சீனிவாசன்
அரசியலுக்கு யார் வேண்டுமாலும் வரலாம், ஆனால் அவர்கள் மக்களை நேசிப்பவராக இருக்க வேண்டும் என பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பாஜகவின் 9 ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு உரையாற்றினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், “மல்யுத்த வீராங்கனைகள் விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவையடுத்து விசாரணை நடைபெறுவருகிறது. மோடி, அமலாக்கத்துறை யாராலும் திமுகவை அழிக்க முடியாது என அமைச்சர் உதயநிதி கூறுகிறார். ஆனால் திமுகவை திமுகவினரே அழித்து விடுவர்.
ஆளுநரை திரும்ப பெற மதிமுக எத்தனை கோடி கையெழுத்து வாங்கினாலும் அரசியலமைப்பு சட்டப்படி யாராலும் மாற்ற முடியாது, நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழகத்திற்கு சாபக்கேடு என திருமாவளவன் கூறுகிறார். அரசியலை சினிமா சூட்டிங்போல நினைத்துக்கொள்கிறார்கள். அரசியலுக்கு யார் வேண்டுமாலும் வரலாம், ஆனால்,அவர்கள் மக்களை நேசிப்பவராகவும், பணி செய்பவர்களாகவும் இருக்க வேண்டும். தமிழக முதலமைச்சர் பீகாருக்கு சென்ற போது GO BACK STALIN என அங்கு அம்மாநில மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்” என்றார்.