Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது - ஆளுநருக்கு முதலமைச்சர் பதிலடி

தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது – ஆளுநருக்கு முதலமைச்சர் பதிலடி

-

மு.க.ஸ்டாலின்
 

தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

திருவள்ளுவர் தினத்தையொட்டி, தமிழ்நாடு ஆளுநர் மாளிகை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன். அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது. இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்- ஆளுநர் ரவி” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவுடன் திருவள்ளுவர் காவி உடை அணிந்த புகைப்படமும் இடம்பெற்றிருந்தது.

காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்தைப் பகிர்ந்த ஆளுநர்!

இந்த நிலையில், ஆளுநரின் பதிவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் – முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் – அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர். 133 அடியில் சிலையும் – தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

MUST READ