சேது சமுத்திர திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தை முன் மொழிந்தார்.


இதுதொடர்பான தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு அனைத்து ஒத்துழைப்பையும் அளிக்கும். அண்ணாவின் கனவு திட்டமான சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசு முன் வர வேண்டும். சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த கலைஞர் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டார். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோதே திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கலைஞர் அவரிடம் வலியுறுத்தினார்.
1998 ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதும் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தும்படி கலைஞர் வலியுறுத்தினார். 2,427 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் திடீரென அரசியல் காரணத்துக்காக முடக்கப்பட்டது. தொடக்கத்தில் திட்டத்தை ஆதரித்துவந்த ஜெயலலிதா திடீரென தனது நிலைபாட்டை மாற்றிக்கொண்டு வழக்கு தொடர்ந்தார்.சேது சமுத்திர திட்டத்துக்கு அரசியல் காரணத்துக்காக முட்டுக்கட்டை போட்டது பாஜக அரசுதான். பின்னர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது 2005 ஆம் ஆண்டு திட்டத்தை தொடங்கிவைத்தார்” என பேசினார்.
இந்த தீர்மானம் குறித்து பேசிய பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், ராமர் பாலத்துக்கு சேதம் ஏற்படாமல் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால் பாஜக ஆதரவு அளிக்கும் எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய ஜவாஹிருல்லா, ”சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால் தூத்துக்குடி துறைமுகமாகும். இந்தியாவுக்கு கடல்சார் பாதுகாப்பு வலுவாக இருக்கும்” என்றார்.
