தமிழகத்தில் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முன்னாள் அமைச்சரும், திமுகவின் முதன்மைச் செயலாளருமான கே.என். நேருவுக்குச் சொந்தமான இடங்கள் உட்பட 19-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று அதிகாலை முதல் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
19 இடங்களில் அதிரடி சோதனை
திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என். நேருவின் இல்லம், சென்னையில் உள்ள அவரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்குச் சொந்தமான ‘டிவிஹெச்’ (TVH) கட்டுமான நிறுவனம் மற்றும் சென்னை அடையாறு, திருவான்மியூர், அண்ணா நகர், ஆர்.ஏ.புரம் ஆகிய பகுதிகளில் உள்ள தொடர்புடைய இடங்களிலும் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல, கோவையின் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள கே.என். நேருவின் மற்றொரு சகோதரர் வீட்டிலும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம்
இந்தச் சோதனைகளுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த நடவடிக்கையை “ரீல்ஸ் அரசின் பூச்சாண்டி நடவடிக்கை” எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.

அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது
“உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது; சட்டமன்றக் கூட்டத்தொடரும் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே கழக முதன்மைச் செயலாளர் சகோதரர் திரு. கே.என். நேரு அவர்கள் மீதான சோதனை நடவடிக்கையைத் த.வெ.க. அரசு மேற்கொண்டுள்ளது.
ஆட்சி அமைக்க மற்ற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து, சட்டமன்ற வளாகத்திலேயே அவர்களைத் தம் கட்சியில் சேர்த்ததையும் குதிரை பேரம் நடத்தியதையும், அது தொடர்பான புகார்களில் லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையைக் கூட பதியாததையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவர்.
இந்திய ஜனநாயகத்தின் இருண்ட பக்கமாய் இந்தப் போக்கு தொடரும் நிலையில், வழக்கம்போல் திசைதிருப்பும் நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது இந்த ரீல்ஸ் அரசு. கே.என். நேருவும், கழகமும் புதிய அரசின் இத்தகைய பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சிட மாட்டோம். சட்டத்தின் வழியில் அனைத்தையும் எதிர்கொண்டு வெல்வோம்!” முன்னாள் அமைச்சர் வீடுகளில் நடைபெற்று வரும் இந்த அதிரடி சோதனையும், அதற்கு பதிலடியாக வெளியாகியுள்ள அரசியல் விமர்சனங்களும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளன.
