திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி திமுக பெண் கவுன்சிலர் கணவர் மற்றும் மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ராசிபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராசிபுரத்தைச் சேர்ந்தவர் அருண்லால் (53), இவர் ராசிபுரம் கடை வீதியில் சாய் ஜீவல்லரி என்ற பெயரில் சிறிய அளவிலான நகைக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் தற்போது ராசிபுரம் நகர திமுக துணைச் செயலாளராகவும், வார்டு பிரதிதியாக இருக்கிறார். இவரது மனைவி தேவிபிரியா(46).இவர் தற்போது ராசிபுரம் நகராட்சியில் 13-வது வார்டு திமுக கவுன்சிலவராக உள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ரித்திகா ஸ்ரீ பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இரண்டாவது மகள் மோனிஷா (18)தனியார் பள்ளியில் +2 பயின்று வருகிறார். நேற்று 11ம் தேதி இரவு அருண்லால், நகைக்கடையை மூடிவிட்டு பள்ளிக்குச் சென்று தன் மகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நள்ளிரவில் அருண்லால், அவரது மனைவி தேவி பிரியா ஆகியோர் தூக்கிட்டும் அவரது 17 வயது மகளுக்கு விஷம் கொடுத்தும் வீட்டிற்குள் தற்கொலை செய்துகொண்டனர்.
காலை கடை திறக்க அருண்லால் வராததால், கடை பணியாளர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தனர். வீட்டின் கதவு உள்பக்கம் தாளிட்டு இருந்தது. நீண்ட நேரம் ஆகியும் திறக்காததால், அவர்களது உறவினர்கள் அங்குவந்து, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கணவன் மனைவி இருவரும் தூக்கிட்டுதற்கொலை செய்துகொண்டதும்,மகள் படுக்கையில் பிணமாக கிடந்ததைக் கண்டு அதிர்ந்தனர். இது குறித்த தகவலறிந்து, ராசிபுரம் துணைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார்,காவல் ஆய்வாளர் சுகவனம் அங்கு விரைந்து சென்று, சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லையில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது..போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.