சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பகுதியில் தனியார் உள்விளையாட்டு அரங்கத்தை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பின்னர் இந்த மைதானத்தில் முதல் போட்டியாக கபடி போட்டியை துவக்கி வைத்து வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.


பின்னர் உரையாற்றிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, “இந்த உள்விளையாட்டு அரங்கத்தை பயன்படுத்திக் கொண்டு தேசியளவில் தங்கப்பதங்களை வென்று மாணவர்கள் சாதனை புரிய வேண்டும். வெற்றி என்ற சொல் மட்டும்தான் வீரர்,வீராங்கனைக்கு எண்ணமாக இருக்க வேண்டும், அதிமுக ஆட்சியில் இருக்கும் போது கபடி விளையாட்டிற்காக பல்வேறு சாதனைகளை அதிமுக ஆட்சி செய்தது. விளையாட்டு வீரர்களுக்கு உடற்பயிற்சி, விளையாட்டு இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கு அடித்தளமாக விளங்குகிறது.
அதனை நேசித்து வாழ்ந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். எந்தவித செலவு இல்லாமல் விளையாட்டை கற்றுகொள்ளக்கூடிய ஒரே விளையாட்டு கபடி விளையாட்டு தான். மேலும் சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்தவர் கூட,கபடி விளையாட்டு கற்றுக்கொள்ளலாம். உடல் ஆரோக்கியமாக விளங்கும் என்றும் ஊக்கப்படுத்தினார். வீரர், வீராங்கனை உடல் ஆரோக்கியத்திற்காக தான் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகளில் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக மூன்று சதவீதம் இடஒதுக்கீடு அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் 12,524 ஊராட்சிகள் உள்ளது.528 பேரூராட்சிகள் இருந்தது. இதில் இளைஞர்கள்,மாணவர்கள் விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டும் என்பதற்காக அதிமுக ஆட்சியில் 73.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் விளையாட்டுத் திறமை அடிப்படையில் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லக்கூடிய வீரர் வீராங்கனைகளுக்கு, தேவைக்கேற்ப உதவிகள் செய்து ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடும் வகையில் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் விளையாட்டில் ஊக்குவிப்பதற்காக அதிமுக அரசு பல்வேறு சலுகைகளை ஏற்படுத்திக் கொடுத்தது” எனக் கூறினார்.
