அதிமுக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் நேற்று சென்னை வானகரம் ஜீசஸ் கால்ஸ் வளாகத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. கட்சியின் அமைப்புச் செயலாளர் செல்லபாண்டியன் வரவேற்றுப் பேசினார். திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் கிறிஸ்துமஸ் வாழ்த்துரை வழங்கினார். இதில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் கேக் வெட்டினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “இயேசுவின் பிறப்பு கிறிஸ்தவர்களுக்கு மட்டும் மகிழ்ச்சி அல்ல, உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சி தரக்கூடியது. அனைத்து சமுதாயமும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்றவர் இயேசு கிறிஸ்து. கிறிஸ்தவர்களை பிற்படுத்தப்பட்டோராக அறிவித்தவர் எம்ஜிஆர். அதன் மூலம் கல்வி, வேலை வாய்ப்புகளில் இன்று வரை கிறிஸ்தவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
கிறிஸ்தவர்கள் ஜெருசேலம் சென்று வர நிதி உதவி அளித்தவர் ஜெயலலிதா. பென்னிகுயிக் மணிமண்டபம் திறந்து வைத்தவர் ஜெயலலிதா. சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த அப்துல் கலாம் ஜனாதிபதியாக ஆதரவு கொடுத்தவர் ஜெயலலிதா . சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கியவர், சிறுபான்மை மக்களின் நலனை பாதுகாத்தவர் ஜெயலலிதா. கிறிஸ்தவர்களுக்கும் அதிமுகவினருக்கும் உள்ள பாசப்பிணைப்பு வருங்காலத்திலும் தொடரும். வாழ்க்கையில் நிறைய கஷ்டங்கள், கவலைகள் இருந்தாலும் பொறுமையுடன் அதை களைந்து வெற்றி பெற வேண்டும். அதிமுக ஆட்சியில் கிறிஸ்தவர்களுக்கும், சிறுபான்மையின மக்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்கள் பொருளாதார உயர பாடுபட்ட அரசு அதிமுக. சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான கட்சி அதிமுக” என தெரிவித்தார்.