கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலிலின்போது திருப்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளராக கே.ஆர்.பெரிய கருப்பன் போட்டியிட்டார். தேர்தல் பிரச்சாரத்தின்போது பட்டமங்கலம் என்ற இடத்தில் திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது மோதல் தொடர்பாக கே.ஆர்.பெரியகருப்பன் உள்ளிட்ட 8 பேர் மீது, திருக்கோஷ்டியூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிவகங்கை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் தன் மீதான வழக்கு ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் பெரியகருப்பன் சார்பில் வழக்கறிஞர் முத்துராமலிங்கம் ஆஜராகி, சம்பவம் நடந்தபோது அந்த இடத்தில் அமைச்சர் பெரிய கருப்பன் இல்லை என்றும், வேறொரு இடத்தில் பிரச்சாரம் செய்துகொண்டு இருந்தார் என்றும் தெரிவித்தார்.
மேலும், சம்பவத்திற்கும் அவருக்கும் எந்த தொடர்பு இல்லை, எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.