கோவையில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய அக்கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செயல்பாட்டில் உடன்பாடு இல்லாததால் அக்கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த ராமச்சந்திரன், வடக்கு மாவட்ட வணிகர் பாசறை மாவட்ட செயலாளர் செந்தில்குமார், தொழிற்சங்க பேரவை மாவட்ட செயலாளர் ஏழுமலை பாபு, மாவட்ட பொருளாளர் கமல கண்ணன், மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் அபிராமி கதிர்வேல் உள்ளிட்ட நிர்வாகிகள் அண்மையில் அக்காட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், கோவை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த ராமச்சந்திரன் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் இன்று கோவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பொன்னாடை அணிவித்து வரவேற்றார்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி ராமச்சந்திரன், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நிலையில், சரியான தலைமை இருக்கக்கூடிய கட்சிக்கு செல்வதாக திட்டமிட்டு இருந்ததாகவும், சீமான் நடிகர் ரஜினியை சந்தித்து சங்கி எங்களது தோழர் என்று கூறிய நிலையில், சங்கியாக இருப்பதைவிட தோழராக இருப்பதே சரி என எண்ணி திமுகவுக்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.
திமுக வில் சரியான தலைமை இருப்பதாகவும் பொறுப்பு அமைச்சரும் சிறப்பாக செயல்படுவதால் அவர்களுடன் இணைந்து பயணிக்க திட்டமிட்டு தற்போது திமுகவில் இணைந்திருப்பதாகவும் தெரிவித்தார். நாம் தமிழர் கட்சியில் நிறைய பேர் அதிருப்தியில் தான் உள்ளதாகவும், அவர்களும் விரைவில் திமுகவில் இணைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த இணைப்பு நிகழ்ச்சியில், கோவை மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொஅ.ரவி, தளபதி முருகேசன், மாநில மாணவரணி தலைவர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போட் ராஜேந்திரன், மாநில மாணவரணி துணைச்செயலாளர் விஜி.கோகுல், பகுதி கழக செயலாளர்கள் பொன்னுச்சாமி, சிரவை சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்