சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து , ஆபரணத்தங்கம் விலை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனேயே இருந்து வருகிறது. அவ்வப்போது விலை சற்ரு குறைவது போல போக்கு காட்டினாலும், ராக்கெட் வேகத்தில் ஏற்றம் கண்டிருப்பதை காண முடிகிறது. தங்கம் ஒரு சிறந்த மூதலீடாக பார்க்கப்படுவதாலும், நடுத்தர வர்க்கத்தினருக்கு ஆபத்துக் காலங்களில் உதவும் நண்பனாகவும் தங்கம் இருந்து வருகிறது. அதிலும் தென்னிந்திய கலாச்சாரங்களின் படி, இல்ல சுபநிகழ்ச்சிகள், உறவுகளுக்கு சீர்வரிசை செய்வது, பிள்ளைகளில் எதிர்கால நலன் கருதி சேமிப்பு என அனைத்திலும் தங்கம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இதனாலேயே தங்கம் வாங்க அனைத்துத் தரப்பினரும் ஆர்வம் காட்டுவதுண்டு.. ஆனால் அண்மைக்காலமாக அசுர வேகத்தில் உயர்ந்து வரும் தங்கத்தின் விலை நடுத்தரவர்க்கத்தினர், இல்லத்தரசிகள், சுப நிகழ்ச்சிகளுக்கு திட்டமிட்டுள்ளவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் தங்கம் இனி எட்டாக்கனியாகிவிடுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


கடந்த அக்.7ம் தேதி சவரன் ரூ. 90 ஆயிரத்தை தாண்டிய போதே வரலாறு காணாத புதிய உச்சமாக கருதி அதிர்ச்சியடைந்த நிலையில், அதன்பிறகு 8ம் தேதி ரூ. 91,000, 11ம் தேதி ரூ.92,000, அதிரடியாக நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.1960 உயர்ந்து ஒரு சவரம்ன் ரூ. 94 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை எட்டியிருந்தது. அதிலும் கடந்த சில நாட்களாக காலை, மாலை என இருவேளைகளிலும் தங்கத்தின் விலை தாறுமாறாக ஏற்றம் கண்ட வண்ணம் உள்ளது.
நேற்றைய தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 11,860க்கும், ஒரு சவரன் ரூ.94,880க்கும் விற்பனை செய்யபப்ட்டது. இந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 95 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரன் ரூ.11,900க்கும் , ஒரு சவரன் ரூ.95,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரம் கடந்த ஒரு வாரமாக ஏறு முகத்தில் இருந்து வந்த வெள்ளி விலை இன்று கிராமுக்கு 1 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி சில்லறை விற்பனையில் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.206க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2லட்சத்து 6 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.



