அரசு ஊழியர்களின் இடமாற்றம் போன்ற நிர்வாக நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மூன்று ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்களை கட்டாயமாக இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

தற்போது தேர்தல் காலம் நிலவுவதால், அரசு நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் நடைபெற்று வருகின்றன. இந்த சூழ்நிலையில், இடமாற்றம் போன்ற நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், ஏற்கனவே தேர்தல் ஆணையம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் கூடுதல் உத்தரவு பிறப்பிக்க இயலாது என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் அரசு ஊழியர்களின் இடமாற்றம் என்பது முழுக்க முழுக்க பணி சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், இந்த வழக்கை பொதுநல வழக்காக கருத முடியாது என தலைமை நீதிபதி குறிப்பிட்டுள்ளாா்.
மணப்பாறை தாலுகா மானவாரி மற்றம் இறவை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் அரசு ஊழியர்களை இடமாற்றம் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த போது, மேற்கண்ட கருத்துகளை நீதிமன்றம் பதிவு செய்தது. இதன் மூலம், நிர்வாகத் தீர்மானங்களில் நீதித்துறை தலையீடு செய்யும் வரம்புகள் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளன.
