ஆசிரியைகள் பள்ளிக்கு சுடிதார் அணிந்து வரலாம் என்கிற அரசாணைக்கு தொடக்கப்புள்ளியாக இருந்த ஆசிரியைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ‘கல்வித்தாரகை’என்னும் விருது வழங்கியுள்ளார்.
கடலூர் மாவட்டம் மடுவங்கரை அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் சசிகலா. கடந்த 2012ம் ஆண்டு ஆசிரியர் பணியில் சேர்ந்த இவர் தன் மாணவர்களுக்காக தனது சொந்த நகைகளை விற்று நாற்காலிகள், மேசைகள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகளை ஏற்பாடு செய்ததோடு, மாலை நேரங்களில் பின் தங்கிய சமூகத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்காகவும், மக்களுக்காகவும் பயிற்சி வகுப்புகளை எடுத்து வருகிறார். நண்பர்கள், ஊராட்சிமன்ற தலைவர் உதவியுடன் பயிற்சிப் பள்ளி , நூலகம் உள்ளிட்டவற்றை அமைத்துள்ள இவர் தன் சம்பளத்தில் இருந்து 15% தொகையை அதற்காக ஒதுக்கியிருக்கிறார்.
மாணவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் சசிகலா தான், கடந்த ஆண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சுடிதார் அணிந்து பள்ளிக்கு வரலாம் என்கிற அரசாணை வெளியிடப்பட்டதற்கு முக்கிய காரணம். இவர் ஒரு நாள் பள்ளிக்கு சுடிதார் அணிந்து சென்றதனால் தான் ஆசிரியர்கள் சுடிதார் அணியலாமா என்கிற சர்ச்சையையே வெடித்தது. இந்நிலையில் விகடன் குழுமம் சார்பில் ஆசிரியை சசிகலாவிற்கு ‘கல்வித்தாரகை’ விருது வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “ “அரசுப் பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணிந்து பள்ளிக்கு வரலாமா” என 2023ஆம் ஆண்டின் கடைசியில் பிற்போக்குவாதிகள் கூக்குரலிட்டார்கள். அவர்களின் அச்சத்திற்கு காரணமானவர்தான் கடலூர் மாவட்டம் எம்.ஜி.ஆர் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் இரா.சசிகலா அவர்கள். இவர் பள்ளிக்கு சுடிதார் அணிந்து சென்ற காரணத்தினால்தான் “அரசுப் பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணிந்து பள்ளிக்கு வரலாமா” என்கிற பிற்போக்குத்தனமான விவாதம் எழுந்தது.
அதைத்தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி “பெரியார் மண்ணில் ஆசிரியைகள் சுடிதார் அணிந்து பள்ளிக்கு வர எவ்விதத் தடையும் இல்லை” என அறிவித்தோம்.
கல்வியிலும், சமூகத்திலும் மறுமலர்ச்சி ஏற்படுத்தி வரும் ஆசிரியர் இரா.சசிகலா அவர்களுக்கு எனது கைகளால் அவள் விகடன் சார்பாக “கல்வித்தாரகை” விருது வழங்கியதில் பெருமை அடைகிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
“அரசுப் பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணிந்து பள்ளிக்கு வரலாமா” என 2023ஆம் ஆண்டின் கடைசியில் பிற்போக்குவாதிகள் கூக்குரலிட்டார்கள். அவர்களின் அச்சத்திற்கு காரணமானவர்தான் கடலூர் மாவட்டம் எம்.ஜி.ஆர் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் இரா.சசிகலா அவர்கள். இவர் பள்ளிக்கு சுடிதார்… pic.twitter.com/8uH7yaPngM
— Anbil Mahesh (@Anbil_Mahesh) November 23, 2024