டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு நாளை நடைபெறுவதையொட்டி தமிழகத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கான முதல் நிலைத்தேர்வு நாளை நடைபெறவுள்ளது. இதில் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், வனவர் உள்பட பல்வேறு குரூப்-2 பதவிகளில் 507 காலிப்பணியிடங்களும், உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர் உள்பட குரூப்-2ஏ பதவிகளில் ஆயிரத்து 820 காலிப்பணியிடங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 327 காலிப்பணியிடங்களுக்கு நாளை தேர்வுகள் நடைபெற உள்ளது.
குரூப் 2, 2ஏ தேர்வினை தமிழகம் முழுவதும் 2,763 தேர்வு மையங்களில் 7 லட்சத்து 93 ஆயிரத்து 947 தேர்வர்கள் எழுத உள்ளனர். சென்னையில் நாளை 251 தேர்வு மையங்களில் 75 ஆயிரத்து 185 தேர்வர்கள் தேர்வுகளை எழுதுகின்றனர். தேர்வர்கள் 8.30 மணிக்குள் தேர்வு அறைக்கு வர வேண்டும் என்றும், சலுகை நேரமான 9 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு மையத்தில் அனுமதிக்கப் படமாட்டார்கள் என்றும் டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.
இதனிடையே, டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு நடைபெற உள்ளதால் நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை நாளாக அறிவித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.