தமிழக ஆளுநருக்கு எதிராக கூட்டணி கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளதாக சிபிஎம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், “பொதுவுடமை இயக்கங்களின் முன்னோடியும், கியூபப் புரட்சியின் வெற்றிக்கு வித்திட்ட தோழர் பிடல் காஸ்ட்ரோ அவர்களுடன் இணைந்து போராடிய புரட்சியாளரும், உலகப் புகழ்பெற்ற மார்க்சிய சிந்தனையாளருமாகிய தோழர் சேகுவேரா அவர்களுடைய புதல்வியார் திருமதி அலெய்டா குவேராவும், அவரது மகள் பேராசிரியர் ஸ்டெஃபானி ஆகியோருக்கு சென்னையில் 18.1.2023 அன்று நடைபெறவுள்ள வரவேற்பு விழாவிற்கு தமிழக முதல்வர் அவர்கள் கலந்து கொள்ள வேண்டுமென அழைப்பிதழ் அளித்தோம்.

இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் உள்ளிட்ட தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வர்ணாசிரம அடிப்படையில் பெண்கள் மேலாடை அணிவதற்கு தடை கடைபிடிக்கப்பட்டதை எதிர்த்து நடைபெற்ற வீரஞ்செறிந்த தோள்சீலைப் போராட்டத்தின் 200வது ஆண்டு விழா கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் முதலமைச்சர் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென அழைப்பிதழ் அளிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
தஞ்சை – கடலூர் மாவட்டங்களில் செயல்படும் திருஆருரான், ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகள் பெயரில் வாங்கிய கடன் வலையிலிருந்து விவசாயிகளை விடுவிக்க தமிழ்நாடு அரசு, வங்கி நிர்வாகங்கள் மற்றும் ஆலை நிர்வாகத்தோடு பேசி தீர்வு காண வேண்டும் என வற்புறுத்தினோம்.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தொடர்ந்து தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் விரோதமாகவும், பழமைவாத சனாதன கருத்துக்களையும், அரசியல் சாசனத்திற்கும் முரண்பாடாக பேசி வருவது தொடர்ந்து கொண்டுள்ளார். தமிழக ஆளுநராக இருந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிரான முறையில் செயல்பட்டு வருகிறார். புதிய கல்விக் கொள்கையை அமலாக்குவது, தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுப்பது மறுப்பது, குறிப்பாக, நீட் விலக்கு, ஆன்லைன் ரம்மி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்து கிடப்பில் போட்டுள்ளார். மேலும், நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு பெயரை பயன்படுத்துவது தவறு என பேசியுள்ளது அரசியல் சாசனத்திற்கு விரோதமானதாகும். ஆளுநரின் இந்தப் போக்கை எதிர்த்து தமிழகத்தில் பல அரசியல் கட்சிகளும், அமைப்புகளும், ஜனநயாக இயக்கங்களும் கண்டன குரல் எழுப்பி வருகின்றன. அது குறித்த தமிழக மக்களின் கொந்தளிப்பான எதிர்ப்பு உணர்வுகளை தெரியப்படுத்தினோம்” எனக் கூறினார்.
