கரூர் விஜய் பிரச்சார கூட்டத்திற்கு முழுமையான பாதுகாப்பு வழங்கியிருந்தால் உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கரூரில் தமிழக வெற்றி கழக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்ற அஞ்சலி செலுத்தினார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதேபோல் கூட்டநெரிசலில் காயமடைந்தவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர். தவெக பிரசார கூட்டம் தொடங்கிய சிறிதுநேரத்தில் மின் விளக்குகள் அணைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு 39 பேர் உயிரிழந்துள்ளனர். தவெக நடத்திய முந்தைய கூட்டங்களின் நிலையை ஆய்வுசெய்து, அதற்கேற்ப முழு பாதுகாப்பை அரசு காவல்துறை தந்திருக்க வேண்டும். ஆனால், பாதுகாப்பு குறைபாடு இருந்தது தெரிகிறது.
அனுபவமுள்ள கட்சிகளின் கூட்டங்களைப் பார்த்து புதிய கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டும். காவல்துறை நடுநிலைமையுடன் செயல்பட வேண்டும். முழுமையான பாதுகாப்பு வழங்கியிருந்தால் உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம். அரசியல் தலைவர்கள் ஒரு நேரத்தை குறிப்பிட்டு விட்டு பலமணி நேரம் கழித்து வருவது ஏற்கத்தக்கது அல்ல. அரசியல் கட்சி தலைவரும் நிலைமையை கூர்ந்து கவனித்து ஆலோசித்து, செயல்பட்டிருக்க வேண்டும். அரசியல் கட்சி கூட்டம் நடத்தினால், கட்சி, காவல்துறை, அரசை நம்பிதான் மக்கள் பங்கேற்கிறார்கள். கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மின்சாரம் துண்டிப்பால் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாகவே கூட்ட நெரிசலில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என செய்தி வருகிறது. அரசும், காவல்துறையும் முழுமையான பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.