மதுரையில் 500 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.


சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், திருமங்கலம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தினை செயல்படுத்த அரசு ஆவணம் செய்ய வேண்டும் என திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பினார்.. இதற்கு பதிலளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,
திருமங்கலம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் நிதி நிலைக்கு ஏற்ப விரைந்து செயல்படுத்தப்படும் என கூறினார். மேலும், 21 கிலோமீட்டர் தொலைவிற்கு பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், 40 கிலோ வாட் திறன் கொண்ட கசடுக்கழிவு அப்புறப்படுத்த பணிகள் நடந்து வருகிறது என்றும், கழிவுநீரில் ஏற்படும் கசடுகழிவுகளை தனியாருடன் இணைந்து பணியை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அதேபோல, மதுரையை போன்று அருகில் இருக்கும் நகரங்களில் மாநகராட்சி போன்று வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக கூறிய அவர், மதுரைக்கு அருகில் உள்ள நகரங்களை மேம்படுத்தினால் மதுரையில் இட நெருக்கடி குறையும் என்பதால் இதனை உடனடியாக செயல்படுத்த முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிதி நிலை ஏற்ப விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.
அதேபோல், மதுரையில் மக்கள் தொகை அதிகரித்துள்ளதால் புதிய பாதாள சாக்கடை அமைக்க வேண்டும் என மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தளபதி கோரிக்கை வைத்தார். அதற்கு அமைச்சர் கே.என்.நேரு, 21 மாநகராட்சிகளில் 19 மாநகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சிவகாசி, ஓசூர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அதேபோல்,மதுரை, கோவை, சென்னை உள்ளிட்ட நகரங்களிலும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் , மதுரையில் 500 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்றும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
