மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான கட்டுமான பணிகள் இன்று தொடங்கியுள்ளன.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு கடந்த 2015ம் ஆண்டு அறிவித்தது. இடம் தேர்வு, நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட காரணங்களால் அந்த திட்டம் தாமதமாகிய நிலையில், மதுரை மாவட்டம் தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடந்த 2018ம் ஆண்டு டிசம்பரில் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து பிதமர் மோடி கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து ஜப்பான் பன்னாட்டு நிதி நிறுவனமான ஜெய்காவுடன் கடந்த 2021ம் ஆண்டு கடனுக்காக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி மருத்துவமனை கட்டுமான பணிக்கான டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டரை எல் அண்ட் டி நிறுவனம் கைப்பற்றியது.
இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் இன்று தொடங்கியுள்ளன. எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டப்பட்டு 5 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளன. L&T நிறுவனம் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை 33 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 10 தளங்களுடன் 870 படுக்கை வசதிகளுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இதனிடையே நாடாளுமன்ற தேர்தலை நோக்கமாக வைத்தே எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன