மதுரை மாநகர் விஸ்வநாதபுரம் முதலாவது தெரு பகுதியில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு அலுவலகம் செயல்பட்டுவருகிறது. இங்கு போதைப்பொருள் கடத்தல், விற்பனை தொடர்பான வழக்குகள் குறித்த விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

மேலும் வழக்கில் தொடர்புடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேகே நகர் பகுதியில் 5 கோடி மதிப்பீட்டில் மெத்தப்பெட்டமைன் வீட்டில் பதுக்கி வைத்திருந்த தமிமுன் அன்சாரி என்பவரை கைது செய்து அவர் வைத்திருந்த பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் 12 ஆம் தேதி நள்ளிரவு மர்ம நபர் ஒருவர் அந்த பைக்குகளுக்கு தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக புகாரின் அடிப்படையில் தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு அலுவலகத்தில் உள்ள பைக்குகளுக்கு தீ வைத்த நபரான மதுரை ஆனையூர் டோபாஸ் காலனி பிரசன்னா நகர் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்ற மேத்தா என்பவரை தல்லாகுளம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவர் மீது செல்லூர் உள்ளிட்ட காவல்நிலையங்களில் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. அருண்குமார் பைக்குகளை தீ வைத்ததற்கான காரணம் என்ன என்பது குறித்தும் பின்புலத்தில் வேறு யாரேனும் இருக்கிறார்களா ? என்பது குறித்தான விசாரணையை போலீசார் நடத்தியுள்ளனர்.
அருண்குமார் மதுபோதையில் அலுவலகத்தில் முன்பாக நிறுத்தப்பட்ட வாகனங்களில் இருந்து பெட்ரோலை பிடித்து தீ பற்றவைத்து எரித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.