ஆளுநர் வரலாறு தெரியாமல் பேசுகிறார் தமிழகத்தை தமிழ்நாடு என்று அழைப்பதுதான் மிகவும் சரியானது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூண்டி, காணை ஒன்றியத்திற்குட்பட்ட கஞ்சனூர், சித்தேரி, வெள்ளேரிப்பட்டு கிராமத்தில் புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம், நியாவிலைக்கடை, அறிவியல் ஆய்வகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில், உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்துகொண்டு, விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடத்தைத் திறந்து வைத்தார்.பின்னர் பணியின்போது உயிரிழந்த வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் பொன்முடி, “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் யூனியன் ஆப் ஸ்டேட்ஸ் என்று இந்தியாவில் இருக்கின்ற மாநிலங்களை குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில்தான் தமிழகத்தை நாம் தமிழ்நாடு என்று சொல்லுகிறோம். இதேபோல், ராஷ்டிரம் என்றால் இந்தியில் நாடு என்று பொருள். அதனால்தான் மகாராஷ்டிரம் என்று அழைக்கப்படுகிறது. எனவே, அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் பக்கத்தில் முதல் வரியில் மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதைப்போல, தமிழ்நாடு என்றுதான் தமிழகத்தை அழைக்க வேண்டும். அதுதான் மிகவும் சரியானது. ஆளுநர் ரவி வரலாறு தெரியாமல் பேசி வருகின்றார்” எனக் கூறினார்.
