ஓபிஎஸ் என்னை சந்திக்க நேரம் கேட்டுள்ளார்- சசிகலா
ஓபிஎஸ் என்னை சந்திக்க நேரம் கேட்டுள்ளார், விரைவில் சந்திப்பு நடைபெறும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு விமானம் மூலம் சென்னை திரும்ப முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கோவை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “கொங்கு மண்டலத்தில் சுற்றுபயணம் மன நிறைவைக் தந்தது. சுற்றுப்பயணம் தொடர்ந்து நடைபெறும். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அனைவரும் நிச்சயமாக இணைவோம். இணைப்பு முயற்சி நன்றாக சென்று கொண்டிருக்கிறது.
தற்போதைய அதிமுகவின் செயல்பாட்டை நீங்கள் தான் பார்கிறீர்களே. ஜெயலலிதா இருக்கும் போது கட்சி எப்படி இருந்தது. இப்போது அந்த நிலைமைக் இருக்கிறதா? என்பதை உங்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன். அதிமுகவில் அனைவரையும் ஒன்று சேர்ப்பதே எனது பணி. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் கட்சியில் சேர மன்னிப்பு கடிதம் கொடுத்ததாக தெரியவில்லை. ஒபிஎஸ் என்னை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார். விரைவில் சந்திப்பு நடைபெறும். தமிழக அரசு ஆமை வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.
சுதந்திரத்திற்கு பிறகு ஒரு முதல்வர் மக்களுக்காக பேசாமல், தனிப்பட்ட நபருக்காக பேசுவது இதுவே முதல்முறை. உங்களிடம் தவறில்லை என்று நிரூபியுங்கள். அதற்கு ஏன் மத்திய அரசை குறை கூறுகிறீர்கள்? தமிழகத்தில் மக்கள் பார்வையை பொறுத்தவரை அதிமுக தான் சிறந்த எதிர் கட்சியாக செயல்படுகிறது” என்றார்.