முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த வழக்கு ஜூலை 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14- ஆம் தேதி சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஜாமீன் கோரி பலமுறை தாக்கல் செய்த மனுக்கள் நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டன. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 36ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 04ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. உடல்நிலையை காரணம் காட்டி தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய வழக்கு ஜூலை 10க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் இன்று ஆஜராகவில்லை. இதன் காரணமாக செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய வழக்கு ஜூலை 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.