முல்லைப்பெரியார் அணை பகுதிகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மரம் வெட்டுவது உள்ளிட்ட பணிகளை தொடர உரிய சுற்றுச்சூழல் அனுமதியை 4- வாரத்தில் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முல்லைப்பெரியாறு அணை பகுதிகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக அந்த பகுதியில் உள்ள மரங்களை வெட்ட அனுமதி வழங்கவும், அணைக்குச் செல்லும் பகுதியில் சாலைகள் அமைக்க அனுமதி வழங்கவும், பேபி அணையை உறுதிப்படுத்துவதற்கான பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான உரிய உத்தரவை கேரளா அரசுக்கு பிறப்பிக்க கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பராமரிப்பு தொடர்பான விவகாரத்தில் சாலை செப்பனிடுவது, மரத்தை வெட்டுதல் உள்ளிட்ட மராமத்து பணிகளில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து பேசிய தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் உமாபதி, வள்ளக்கடவு சாலையை செப்பனிட கேரள அரசு இதுவரை அனுமதி வழங்காத நிலையில், கால அவகாசம் கோருவதாக தெரிவித்தார். குறிப்பாக பருவமழை முடிந்த பின்னர் அந்த பணியை மேற்கொள்வதாக கேரளா அரசு கூறுவதாக புகார் தெரிவித்தார். கேரளா அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உபகரணங்களை எடுத்துச்செல்ல ஏதுவாக மரத்தை அகற்றுவது, சாலை செப்பனிடும் பணியை பருவமழை முடிந்த உடனே தொடங்குவோம் என்றும், ஏற்கனவே இது தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் கண்காணிப்பு குழுவிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அணையை பலப்படுத்தும் பணியை மேற்கொள்ளும் முன்ஆய்வுகள் தொடர்பாக கண்காணிப்பு குழு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. அதனை அவர்கள் செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணிகளுக்கு மரம் வெட்டுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உரிய சுற்றுச்சூழல் அனுமதியை 4 வாரத்தில் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். அணையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதற்கு முன்பாக தமிழ்நாடு அரசு அந்த பகுதியில் சுற்றுச்சூழல் மற்றும் பராமரிப்பு உபகரணங்களை எடுத்துச்செல்வது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு, அது தொடர்பான அறிக்கையை கேரளா அரசிடம் வழங்க வேண்டும் என்றும், அதன் பின்னரே அணையை பலப்படுத்தும் Grouting பணியை தொடங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். மேலும், முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்த ஏதுவாக சாலை செப்பனிடும் பணிகளை பருவமழை முடிந்தவுடன் விரைவாக நடத்தி முடிக்க வேண்டும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.