தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், முதலமைச்சர் உட்பட 10 அமைச்சர்களுக்கான இலாகாக்கள் இன்று அதிகாரப்பூர்வமாக ஒதுக்கீடு செய்யப்பட்டன.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் விசிக உள்ளிட்ட கூட்டணியின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து புதிய அமைச்சரவை மற்றும் துறை ஒதுக்கீடு பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, முதல்வராக பதவியேற்றுள்ள விஜய்க்கு காவல்துறை, உள்துறை, பொது நிர்வாகம் உள்ளிட்ட முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் மகளிர் நலன், குழந்தைகள் நலன், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் உள்ளிட்ட முக்கிய சமூக நலத் துறைகளும் அவரின் கீழ் வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை பட்டியலின்படி, என். ஆனந்த் அவர்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதவ் அர்ஜூனாவுக்கு பொதுப்பணித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக அருண்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். நிதித்துறை பொறுப்பு முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டுள்ளது. உணவுத்துறை அமைச்சராக வெங்கடரமணன் நியமிக்கப்பட்டுள்ளார். மின்சாரம் மற்றும் சட்டத்துறை பொறுப்பு சி.டி.ஆர். நிர்மல்குமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக ராஜ்மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். கனிம வளத்துறை அமைச்சராக டி.கே. பிரபு பொறுப்பேற்றுள்ளார். மேலும் செய்தித்துறை மற்றும் தொழில்துறை தொடர்பான பொறுப்புகள் தொடர்பாக கீர்த்தனா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அமைச்சரவை பட்டியல் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. புதிய அரசு தனது நிர்வாகத்தை விரைவில் தொடங்கும் நிலையில், துறை ஒதுக்கீடுகள் மாநில வளர்ச்சி திட்டங்களில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் முறைகேடு விவகாரம் – விதிகளை மீறி வாக்களித்த வெளிநாட்டு வாக்காளர்கள் கைது…
