ஊரகப்பகுதிகளில் 5000 நீர்நிலைகளைப் புனரமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டு உள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில் , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி, நீர் நிலைகளை தூர்வாரி, மழைநீரை சேகரித்து நீர் மேலாண்மை செய்வதற்கு முன்னுரிமை அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், இதன் தொடர்ச்சியாக, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 22,051 சிறுபாசன ஏரிகளில் முதற்கட்டமாக நடப்பாண்டில் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5,000 சிறுபாசன ஏரிகளை புனரமைப்பதற்காக 5.9.2024 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி, சிறுபாசன ஏரிகள் இயந்திரங்களைப் பயன்படுத்தி தூர்வாருதல் மற்றும் ஆழப்படுத்துதல், உபரி நீர்போக்கி (கலிங்கு), மதகு போன்ற அனைத்துக் கட்டமைப்புகளையும் பழுதுபார்த்தல் அல்லது புனரமைத்தல், இணைப்பு வரத்து வாய்க்கால்களை தூர்வாருதல் ஆகியவற்றை பொதுமக்கள் பங்கேற்புடன் செயல்படுத்துவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி குறிப்பிட்டுள்ளார்.
இந்த நீர்நிலைகளை புனரமைப்பதால், நீர்நிலைகளின் கொள்திறன் அதிகரிக்கும். நிலத்தடி நீர் மட்டம் உயரும், வேளாண் நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி ஏற்படும், உபரி நீர் வீணாவதையும் தடுக்கும் என்றும் தெரிவித்துள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி, சிறுபாசன ஏரிகளின் கொள்ளளவினை மேம்படுத்தி புனரமைப்பதன் மூலம் வெள்ளம் மற்றும் வறட்சி ஆகிய இரண்டையும் தடுக்கும். பேரிடர் மேலாண்மை முயற்சிகளுக்கு இத்திட்டம் முக்கிய பங்களிப்பு வழங்கும் என்றும் கூறியுள்ளார்.
மேம்படுத்தப்படும் ஏரிகளில் தேவைப்படும் கட்டுமானப் பணிகளான வரத்து மற்றும் போக்குக் கால்வாய், கலிங்கு, மதகு மறுசீரமைக்கும் பணிகள் தேவைப்படின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்ள அமைச்சர் பெரியசாமி, சிறுபாசன ஏரிகளின் கரைகளை பலப்படுத்தி, பசுமைச் சூழலை ஏற்படுத்த பனை மற்றும் உள்ளூர் வகை மரக்கன்றுகள் நடப்படும் என தெரிவித்துள்ளார்.
இத்திட்டம், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனம், சமூக அமைப்புகள், விவசாயிகள் சங்கம், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றின் சொந்த நிதி ஆதாரம் மற்றும் மக்கள் பங்களிப்புடன் கூடிய நமக்கு நாமே திட்டம் மூலமாகவும் மற்றும் மீதமுள்ள சிறுபாசன ஏரிகளுக்கு அரசு நிதி மற்றும் ஊராட்சி அமைப்புகளின் நிதியின் மூலமாகவும் பணிகள் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.
ஆயக்கட்டுதாரர்கள் மற்றும் பயன்பாட்டாளர் அமைப்புகளுடன் சேர்ந்து சிறுபாசன ஏரிகளின் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், ஆயக்கட்டுதாரர்கள் மற்றும் பயன்பாட்டாளர் அமைப்பு இல்லாதபட்சத்தில், புதியதாக பயன்பாட்டாளர்கள் குழுக்கள் அமைத்து புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ள அவர், இத்திட்டத்தின் மூலம் ஊரகப் பகுதி விவசாயிகள் பெருமளவில் பயன்பெறுவதோடு நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயரும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.