Homeசெய்திகள்தமிழ்நாடுவண்டலூர் பூங்காவில் 1,000 கிலோ யானை தந்தம் திருடு போனதாக வெளியான செய்தி தவறானது... உயிரியல்...

வண்டலூர் பூங்காவில் 1,000 கிலோ யானை தந்தம் திருடு போனதாக வெளியான செய்தி தவறானது… உயிரியல் பூங்கா இயக்குனர் விளக்கம்

-

- Advertisement -

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆயிரம் கிலோ யானை தந்தம் திருடு போனதாக வெளியான செய்தி தவறானது என உயிரியல் பூங்கா இயக்குனர், சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் 1,000 கிலோ யானை தந்தம் திருடுபோனதாக ஆங்கில நாளிதழில் செய்தி வெளியானது. இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில்  விசாரணைக்கு வந்தபோது உயிரியல் பூங்கா இயக்குனர் ஆஷிஷ்குமார் ஸ்ரீவத்சவா காணொளி காட்சி மூலமாக ஆஜராகினார்.

அப்போது, பல்வேறு பகுதிகளில் கைப்பற்றப்பட்ட 1,830 கிலோ யானை தந்தங்கள் வண்டலூர் பூங்காவில் உள்ள கிட்டங்கியில் பத்திரப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டு இருந்ததாகவும், 1 கிலோ எடையை கொண்ட 2 துண்டுகள் மட்டும் ஒப்பந்த பணியாளரால் திருடப்பட்டதாகவும், பிறகு அது மீட்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

ஆருத்ரா மோசடி – பாஜக நிர்வாகி உட்பட 21 பேர் கைது
high court

மேலும், ஆயிரம் கிலோ யானைத்தந்தம் திருடப்பட்டதாக வெளியான செய்தி தவறு எனவும் விளக்கம் அளித்தார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அப்போது பல ஆண்டுகளாக இந்த யானை தந்தங்கள் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது அவற்றை அழிப்பதற்கான நடைமுறை என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு காணொளி காட்சி மூலமாக ஆஜராகி இருந்த தலைமை வன பாதுகாவலர் ஸ்ரீனிவாஸ், யானை தந்தங்களை அழிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு விலக்கிவிட்ட காரணத்தினால், குழு அமைத்து இந்த யானைத் தந்தங்கள் அழிக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து, வண்டலூர் பூங்காவில் உள்ள யானைத் தந்தங்களை கணக்கிட்டு, உரிய நடைமுறைகளை பின்பற்றி அழித்து, அது குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை டிசம்பர் 2ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

MUST READ