மேட்டூர் அணையின் 92 ஆண்டு கால வரலாற்றில் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 428 நாட்களாக 100 அடிக்கு மேல் நீடித்து சாதனை படைத்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணை 120 அடி உயரம் கொண்டதாகும். இதன் மொத்த கொள்ளவு 93.47 டி.எம்.சி. ஆகும். தமிழகத்தின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் மேட்டூர் அணை முக்கிய பங்காற்றி வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நாகை, கடலூர் உள்பட 12 மாவட்டங்களில் சுமார் 17 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறுது.


காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நடப்பாண்டில் முழு கொள்ளளவான 120 அடியை 7 முறை எட்டி அணை நிரம்பியது. அணை கட்டி முடிக்கப்பட்டு 92 ஆண்டுகளில் ஒரே ஆண்டில் 7 முறை முழு கொள்ளளவை எட்டியது. கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி அன்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் முதன் முறையாக 100 அடியை எட்டியது. அன்று முதல் இன்று வரை தொடர்ந்து 428 நாட்களாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் நீடித்து சாதனை படைத்துள்ளது. இதனால் டெல்டா மாவட்டவிவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முன்னதாக கடந்த 2005 ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் 2006 அக்டோபர் 4ஆம் தேதி வரை 427 நாட்கள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியாக நீடித்தது. தற்போது அதனை முறியடித்து 428-வது நாளாக மேட்டூர் அணை 100 அடியாக தொடர்ந்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 695 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 109.72 அடியாகவும், நீர் இருப்பு 78.01 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 8,000 கனஅடியும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.


